ஞாயிறு, 3 ஜூலை, 2016

அப்துல் கலாம்

அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி என்பதை விட ஒரு இந்திய அரசு ஊழியர்.அரசின் திட்டங்களை,கனவுகளைச் சிரமேற்கொண்டு செய்யும் விஞ்ஞானி.அவரது ஒரே கண்டுபிடிப்பு இலகுரக போலியோ காலணி.இந்தியாவின் வல்லரசு கனவின்கருனை முகமாக முன்னெடுக்கப்பட்டவர்.ஓய்வுக்குப் பின் மாணவர்களை ஊக்குவிக்கும் தன்முனைப்பு ஆளுமை.அவ்வளவே.அவர் ஒரு சமூகப் போராளியோ தியாகியோ அல்ல.அவருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இந்திய அரசின் அப்துல் கலாம் பிம்பக் கட்டமைப்பின் வெற்றியே.

01 அக்டோபர் 2015

கடந்த வாரத்தில் சென்னை சுங்கத்துறை இணைய தளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டது என்ற செய்தி நாளிதழ்களில் வெளியானது.பல ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசு அவர்களின் அரசாங்க கணிப்பொரிகளில் விண்டோஸ்க்கு பதிலாக லினக்ஸ் இயக்குதளத்தை உபயோகிபதாக முடிவு செய்தது.லினக்ஸில் உள்ள கூடுதல் வசதி என்னவெனில் உங்களுக்கான பாதுகாப்புச் சுவற்றை (Fire wall)நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.இதனால் வேறு நாடுகளிலிருந்தோ அல்லது தனது நாட்டிலோ அரசு கணிணியை ஊடுருவ இயலாது.அப்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட இனிமேல் நாட்டில் திறந்த மென்பொருளைப் பயன்படுத்த ஊக்குவித்து ஓர் அறிக்கை வெளிய்ட்டார்.இதனை அடுத்து பில் கேட்ஸ் இந்தியா வந்து அரசியல் தலைவர்களையும் வர்த்தகர்களையும் சந்தித்தார்.அதன் விளைவாக ஹைதராபாத் நகரில் மைக்ரொசாப்ட்.தனது அலுவலதத்தைத் தொடங்கியது.உடனே அரசியல்வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகள் சிலர் பில் கேட்ஸை இந்தியா வர வைத்தது நமது வளரும் பொருளியல் என்று மார்தட்டிக் கொண்டனர்.அவர் வந்ததன் காரணம் தனது விண்டோஸ் இயக்குதளத்தை விட்டுவிட்டு நாம் எங்கு லினக்ஸுக்கு மாறிவிடுவோமோ என்ற பயம் தானே ஒழிய வேறில்லை.தற்போது நமது அரசு தனது கணிணிகளில் விண்டோஸ் இயக்குதளத்தையே பயன் படுத்துகிறது.அதன் விளைவே இத்தகைய ஊடிருவல்கள்.நாம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நம்த் அரசாங்க இரகசியங்கள் உளவுபார்க்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தண்ணீர்

அசோகமித்திரனின் தண்ணீர் புதினம் வாசகனுக்கு ஓர் புதிய அகதரிசனத்தைத் தரும் அற்புதமானபடைப்பு.சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையின் ஊடாக இந்த சமூக அமைப்பின் சகல அவலங்களையும் தனது எழுத்தின் வழியே நிகழ்த்திக் காட்டி விடுகிறார்.அரசின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் பிரச்சனை, பல ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தர வேலையற்ற கூலிகள்,மெல்லிய திரையின் பின்னால் தெரியும் நகரின் சாதிய அரிதாரம் பூசிய முகங்கள்,வாழ்வில் எந்த சுகமும் அறியாத டீச்சர்,அவளின் கொடுமைக்கார மாமியார் மற்றும் வயதான நோயாளிக் கணவன்,ஓர் சாதாரணக் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் சாயா,தோல்வியினால் ஆசீர்வதிக்கப்பட்டுப் பின் தவறான வழியில் தனது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மனமின்றி அதனுடன் வாழ முடிவுசெய்து வாழ்வை நேருக்கு நேராக எதிர்நோக்கும் துணிவுள்ள ஜமுனா என இச்சிறிய புதினத்துக்குள் இத்தனை கதாபாத்திரங்கள் அதனதன் கதியில் உலவுகின்றன.இறுக்கமாய்க் கதை சொல்லும் பாணி அசோகமித்திரனின் தனித்துவம். என்னளவில் தமிழின் முக்கிய புதினங்களில் தண்ணீரும் ஒன்று.

மராட்டியத் திரைப்படம்

சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின்போது Dr.பிரகாஷ் பாபா ஆப்தே என்ற மனிதரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட ஓர் மராத்தியத் திரைப்படத்தைக் காண நேர்ந்த்து.Dr.பிரகாஷாக நானா படேகர் நடித்திருந்தார்.சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் ஒரு தம்பதியினரின் கதை தான் Dr.பிரகாஷ் திரைப்படம். அடர் காட்டினில் வாழும் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக புலம் பெயர்ந்து காட்டுக்குள் வாழும் சூழலிலிருந்து அந்தப் பகுதி ஒரு கிராம்மாக வளர்வதற்கு வித்திட்ட கதையைச் சொல்கிறது இப்படம். பழங்குடியினர், தந்தையின் உயிருக்காக சிசுவை பலி கொடுப்பதைத் தடுப்பதில் இருந்து தொடங்கும் பயணம் சில ஆண்டுகள் கழித்து வரும் முதல் நோயாளியின் நோயை அறிய முற்படுகையில் வரும் மொழிப் பிரச்சனையில் தொடங்கிப் பல பிரச்சினைகளை அத்தம்பதி வெற்றிகரமாக எதிர்கொண்ட கதை தான் இப்படம். படம் எடுக்கப்பட்ட விதத்தில் இயக்குனரின் முதிர்ச்சியின்மை பல இடங்களில் தெரிகிறது.பல இடங்களில் உணர்ச்சி ததும்பும் வசனங்களால் நிரப்பப்பட்டிருந்தன.ஓரிடத்தில் கூட காட்சி ஊடகத்தின் பலம் பிரயோகிக்கப்படவில்லை.மேலும் அரசுஅதிகாரிகள் பொது அறிவு அற்றவர்களாகவும்,அகம்பாவம் பிடித்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.இவற்றை எல்லாம் மீறி ஓர் உன்னதமான ஆளுமை குறித்த ஆவணப்படுத்துதல் என்ற வகையில் படத்தின் எல்லா குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது.சக உயிர்களிடம் அன்பு செலுத்துகிற உயிரின் அடிப்படைக் குணத்தைக் கூட உன்னதமான என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் நமது சமூக அமைப்பு உள்ளது.முழுத் திரைப்படம்youtubeல் கிடைக்கிறது.
கோர்ட்
ஒரு நல்ல திரைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கோர்ட் மராத்தியத் திரைப்படம் ஓர் மற்றுமோர் உதாரணம்.நீதிமன்றத்தின் அசட்டுத்தனங்களைச் சொல்வதோடு மட்டுமல்லாது அரசு தரப்பு பெண் வக்கீலின் நுகரும் கலாச்சாரம் மற்றும் அவர்களின் இரசனை பற்றிப் பேசுகிறது.அறுபத்திஐந்து வயது உடல் நலமில்லாக் கிழவரை ரிமாண்டில் வைத்துவிட்டு எந்த வித குற்றஉணர்வுமின்றி கோடைகால விடுமுறை செல்லும் நீதியரசர்,ஒரு சராசரி மனிதனின் மூட நம்பிக்கைகளோடும் பணம் குறித்தான சிந்தனைகளோடும் இருக்கிறார்.அவரது குட்டித் தூக்கத்தைக் கெடுக்கும் சிறுவனின் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்.அத்துடன் படம் நிறைவு பெறுகிறது.
குற்றம் நிகழும் தருணத்தில் குற்றவாளியின் அக கொந்தளிப்பயும் புற விஷயங்கள் அக்குற்றத்தின் மீது செலுத்தும் தாக்கமும் அற்புதமாய் வார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் குற்றம் கடிதல்.நான் சமீபத்தில் பார்த்த சில நல்ல தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று.ஆனால் இந்த திரைப்படமும் காக்கா முட்டையும் ஒரே நேரத்தில் வெளியானது.காக்கா முட்டைக்குக் கிடைத்த வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு இல்லை.அதற்குக் காரணம் காக்கா முட்டையின் தயாரிப்பாளர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.தரம் எனப் பார்க்கும்போது குற்றம் கடிதல் காக்கா முட்டையை விஞ்சி நிற்கிறது.குற்றம் கடிதல்
இராவுத்தர்
வீட்டுத் திருமணத்திற்கு
காத்திருக்கும்
கயிற்றால் கட்டப்பட்டு
இலைகளை
மேய்ந்துகொண்டிருக்கும்
ஆடு.
கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா
- தேவதேவன்
காதல் முலாம் பூசி வரும் காமத்தை இதைவிட அழகாய் வெளிப்படுத்த இயலாது.மனித மனத்தை வெட்டி அதிலுள்ள காமத்தையும் அதன் விளைவாய் ஏற்படும் அகச் சிக்கல்களைச் சொல்லும் கதைகள் என்று ஜே.பி.சாணக்யாவின் கதைகளை வகைப்படுத்தலாம்.சில சிறுகதைத் தொகுதிகளை வாசிக்கையில் எல்லா கதைகளையும் நமக்குப் பிடிப்பதில்லை.ஆனால் ஜே.பி.சாணக்யாவின்”கனவுப்புத்தகம்” தொகுதியுல் ஒரு கதை கூட சோடை போனதாகக் கூற இயலாது.அருமையான ஓர் கதைத் தொகுதி.
இந்தியாவுடன் பங்க்ளாதேஷ் மோதியமார்ச் 2016 t20 ஆட்டத்தில் கடைசிப் பந்தில் தோனி ரன் அவுட் செய்ததில் முகநூலில் அவரது விக்கெட் காப்பு திறன் குறித்து சிலாகித்து அதிகமான பதிவுகளைப் படிக்க நேர்ந்தது.இந்திய அணியில் ராகுல் திராவிட் விக்கெட் காப்பாளராக வேண்டா வெறுப்பாக இருந்த நேரத்தில் அவருக்கு மாற்றாக பல விக்கெட் காப்பாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது.ஆனால் நல்ல விக்கெட் காப்பாளர் நல்ல மட்டையாளராக இல்லை.நல்ல மட்டையாளர் சுமாரான விக்கெட் காப்பாளராய் இருந்தார்.அந்நேரத்தில் நல்ல மட்டையாளராகவும் விக்கெட் காப்பாளராகவும் அணிக்குள் வந்த தோனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.இந்திய அணியுல் கடந்த காலங்களில் விக்கெட் கீப்பராக இருந்த கிர்மானி,கிரண்மோருடன் ஒப்புநோக்கையில் தோனி ஒரு சிறந்த விக்கெட் காப்பாளர் இல்லை.அவர் விக்கெட் காப்பில் ஒரு தலை சிறந்த காட்ச் அல்லது ஸ்டம்பிங் என்று ஒன்று கூட இல்லை.அவர் ஒரு நல்ல விக்கெட் காபாளர் மற்றும் அணிக்குப் பயனுள்ள ஒரு நல்ல மட்டையாளர்.அவரது மட்டையடிக்கும் பாணி கிளாசிக் என்று கூற இயலாது.அவர் கடைசி ஓவர்களில் பதற்றமின்றி ஓட்டம் குவிக்கும் திறனும் பந்தை எல்லைக் கோட்டை கடக்க விடும் அவரின் உடல் வலுவும் தான் அவரை நல்ல மட்டையாளராகக் காட்டுகிறது.
சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான காலகட்டத்தில் அதிரடியாக விளையாடினார்.நாட்கள் செல்லச் செல்ல தனது மட்டையடிக்கும் தன்மையை தற்காப்பு ஆட்டமாக மாற்றிக் கொண்டார்.நீண்ட இன்னிங்ஸ்களை தொடர்ச்சியாக(consistent) ஆடுவதற்கு அதிரடியான பாணி பயன்படாது.சில விதிவிலக்குகள் தவிர.(விவியன் ரிச்சட்ஸ்,பிரெயின் லாரா,சேவாக்)தோனியும் அறிமுகமான காலகட்டத்தில் அதிரடியாக ஆடினார்.அதன் பின் தனது ஆட்டப் பாணியைமெல்ல மாற்றிக் கொண்டார்.தற்போது ஒரு கடின இலக்கைச் சென்றடைய வேண்டுமென்றால் கடைசி சில ஓவர்களைத் தவிர்த்து அவர் ஒன்று மட்டும் இரண்டு மறும் மோசமான பந்துகளில் நான்கு ஓட்டங்களும் எடுப்பார்.கடைசி சில ஓவர்களே எஞ்சி இருக்கையில் தனது அதிரடி பாணியைக் கடைப்பிடித்து வெற்றியைத் தேடித் தருவதில் பதற்றமின்றி ஆடும் அவரது மனநிலையும் ஒரு காரணம்.அதனாலேயே அவர் உலகின் great finisherகளில் முதலாவதாக இருக்கிறார்.கோலி ஆறிமுகமான புதிதில் கால் திசையில்(Leg side) மட்டுமே பலம் வாய்ந்தவராக இருந்தார். பின்னர் ஆப் திசையிலும் ஆட முயற்சி செய்தார்.அதிலும் குறிப்பாக அவரது கவர் டிரைவ், வலைப்பயிற்சியின் போது அவர் எடுத்துக்கொண்ட உழைப்பைக் காட்டுகிறது.தற்போது அவர் பந்தின் தரத்திற்கேற்ப மைதானத்தின் அனைத்துத் திசைகளிலும் பந்தை விரட்டுகிறார்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டெஸ்ட் மாட்ச்களில் மிச்சல் ஜான்ஸனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களை உனர்ச்சிவசப்படச் செய்யும் வார்த்தைகளைப் பிரயோகிப்பர்.அது எதிரணி மட்டையாளர்களின் மனதின் சமநிலையைக் குலைத்து அவரை உணர்ச்சிவசப்படச் செய்து விக்கெட்டை வீழ்த்தும் உத்தி.ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லிக்கும் பாகிஸ்தானின் மியாந்ததுக்கும் நடந்த உணர்ச்சிமோதல் மிகப் பிரபலம்.சச்சின் இவ்வகையான வாக்குவாதங்களை ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் அவர் ஆஸ்திரேலிய பவுலர்கலை துவம்சம் செய்ய முடிந்தது.கோலி மிச்சல் ஜான்ஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடுத்த சில பந்துகளில் அவரது மட்டை வீச்சு சிறப்பாக இல்லை.அவர் எப்போதும் ஆக்ரோஷமும் கொந்தளிப்புமான மனநிலை கொண்டவர்.அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.27 மார்ச் அன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான முக்கியமான ஆட்டத்தில் அவர் ஆக்ரோஷத்தோடும் அதே சமயம் நிதானத்தோடும் ஆடியது அவரின் ஷாட் செலக்‌ஷனில் தெரிந்தது.அவர் கெயிலைப் போலவோ தோனியைப் போலவோ அபாரமான உடல் வலு கொண்டவரல்ல.இதை பேட்டிகளில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.t20 ஆட்டங்களில் எல்லைக் கோட்டை நோக்கி பந்தை விரட்டி ஆறு ஓட்டங்கள் எடுக்கும் தோனி,கெயில்,யுவராஜ்,கோரி ஆண்டர்சன்,டிவில்லர்ஸ் போன்றோரே பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்து வெற்றியத் தேடித்தர முடியும் என்ற கூற்றைப் பொய்யாக்கி ஒன்று, இரண்டு மறும் நான்கு ஓட்டங்கள் மூலமும் வெற்றியைத் தேடித்தர இயலும் என்பதை கோலி தனது ஆட்டத்தின் முலம் நிரூபித்துள்ளார்.பல முறை தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தன்ந்தாலும் கோலியின் இந்த ஆட்ட்டமே அவரின் தலை சிறந்த ஆட்டமென்பேன்.
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள்
மதம்,சமூகம் என பல விஷயங்கள் சார்ந்து நாம் பல அறங்களையும் அதன் வழியே மனிதர்கள் குறித்த பிம்பங்களைய்ம் உருவாக்கிக் கொள்கிறோம்.அந்த பிம்பக் கண்ணாடி வழியே நாம் மனிதர்களைப் பார்க்கிறோம்.ஆனால் எந்த பிம்பத்தைத் தாண்டியும் மனிதன் இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம்.எனவே அவன் மீது அன்பு செலுத்துவதை மறுத்துவருகிறோம்.அப்படி புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது ”அவள் அப்படித்தான்” திரைப்படம்.நாயகியின் பால்ய காலம் மகிழ்ச்சியானதாகவோ அன்பு நிறைந்ததாகவோ இல்லை.அவள் தன்னியல்பாகவும் அனுபவம் தந்த கசப்பு மூலமாகவும் போலியான மனிதர்களைக் காண்கையில் வெடிக்கிறாள்.இது அவளைக் குறித்த தவறான ஒரு பிம்பத்தை சக மனிதர்களிடயே உருவாக்குகிறது.அப்போது பெண்கள் குறித்து ஆவணப்படம் எடுக்கும் ஓர் இளைஞனைச் சந்திக்கிறாள்.அவன் அவளின் அன்பிலா வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறான்.அவளை நேசிக்கத் தொடங்குகிறான்.அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான்.ஆனால் அவளின் சீற்றம் அவனை பயம் கொள்ளச் செய்கிறது.அவனால் அவளின் செயல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.அவளைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகுமோ என அஞ்சுகிறான்.கடைசியில் அவனும் அவளைக் கைவிட்டு பெற்றோர் பர்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.தன் மீது அன்பு செலுத்தும் ஒர் மனிதனுக்காக அவள் காத்திருப்பதுடன் திரப்படம் முடிகிறது.மனிதனின் அகச் சிக்கல்களைச் சொல்லும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு.1978ல் வெளியான இப்படம் தமிழக மக்களின் வரவேற்பின்றி தோல்வியடைந்தது.அதன் பாடல்கள் புகழ்பெற்று இருப்பினும்,பாடல்கள் போன்ற வணிக சமரசங்கள் இருப்பினும் தோல்வியடைந்தது.இதைத் தொடர்ந்து மாற்று சினிமா வளரும் சாத்தியத்தை மக்களின் வரவேற்பின்மை தோற்கடித்தது.இருப்பினும் இன்றும் தமிழ்ச் சினிமாவின் ஒரு மைல் கல்லாக,சமூகத்தால் புறக்கணி
க்கப்பட்ட எண்ணற்ற மக்களின் பிரதிதிநிதியாக இத்திரைப்படம் இன்றும் தமிழர்களால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது.you tubeஇ இத் திரைப்படம் கிடைக்கிறது.அதன் சுட்டி இங்கே தரப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=l2XQR3bBZWM

ஊமைச்செந்நாய்
குற்றம் செய்பவர்க்கு கொடுக்கப்படும் தண்டனையானது உடல் ரீதியுல் ஒருவன் ஒடுக்கப்படும்போது அவன் மனம் ஒடுக்கப்படுகிறது.அது அவன் மனதில் ஒரு அனுபவமாகப் பதிகிறது.அக்குற்றத்திற்கான தண்டனையின் பயம் மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து அவனைத் தடுக்கிறது.கருட புராணமும் மனு தர்மமும் இன்ன பிற நூல்களும் கூறும் தண்டனை முறைகள் இதன் அடிப்படையிலானவை.இன்றும் கூட வளைகுடா நாடுகளிலும் பல மூன்றாம் உலக நாடுகளிலும் சில வளர்ந்த நாடுகளிலும் கூட தண்டனை முறைகள் கடுமையானவை.நவீன மனிதனின் பார்வையில் இத்தகைய தண்டனை முறைகள் குற்றம் குறித்த பயத்தை விதைக்கின்றதே ஒழிய அது குறித்த எண்ணத்தையோ அதன் சூழலையோ கணக்கில் கொள்வதில்லை.அதன் காரணமாக மன நோய் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறோம்.ஜெயமோகனின் ”ஊமைச்செந்நாய்” இது குறித்து ஒரு விசாலமான பார்வையை முன்வைக்கிறது.ஒரு வெள்ளை ஆங்கிலேயனிடம் அடிமை போல் வேலை செய்யும் ஒரு இந்தியச் கீழ்குடி இளைஞன் தனது எஜமானுடன் காட்டிற்குச் செல்லுகையில் பாம்பினால் கடிபட்டு இருக்கும் எஜமானைக் காப்பாற்றுவதன் மூலம் அடிமையும் எஜமானும் மனதளவில் நெருங்குகிறார்கள்.அவனை நண்பனாக பாவித்து எஜமானன் தனது கீழான வாழ்க்கை குறித்து மனம் திறக்கிறான்.பாறை வழுக்கி பாதாளத்தில் விழும் நேரத்தில் கை கொடுத்துக் காப்பாற்ற நினைக்கும் எஜமானனின் உதவியைப் புறக்கணித்து சாவத் தழுவுவதன் மூலம் தனது எஜமானின் குற்றங்களுக்கெல்லாம் தண்டனை தருகிறான் அவ்விளைஞன்..அதன் பின் எந்த ஒரு வேலைக்காரனையும் கேவலாமக் அந்த எஜமானால் நடத்த இயல்லதபடி அவனது மனசாட்சியை விழிப்படையச் செய்து விடுகிறான்.ஜெயமோகனின் நடை காட்டாறு போல பாய்ந்து பிரவாகிக்கிறது.அவரது எழுத்தின் பலம்,கதையை காட்சியாக நம்முள் விரியச் செய்வதே..காட்சியாக நம்முள் விரியும் எதுவும் நம்மை அதிகமாக பாதிக்கும்.இரத்தம் என்று எழுதுவதற்கும் இரத்தத் காட்டும் ஒரு புகைப்படம் நம் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.அவரது முல்லை நிலம் குறித்த அறிவு காட்டினுள் கதை நிகழும் நேரத்தில் தெரிகிறது.வாழ்க்கையில் ஒரு முறையாவது அடுத்தவர்களை கீழாக நடத்தும் மனிதனின் மனசாட்சியைத் தூங்கவிடாமல் செய்யும் ஒரு படைப்பு தான் ஊமச் செந்நாய்.கதையை வலைதளத்தில் படிக்க சுட்டி கீழே.
http://www.jeyamohan.in/767#.V3jMohIno7Q